கும்பகோணம்: கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்தவர் ராமநாதன் (63). இவர் சண்முகம் தெருவில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.
வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு ராமநாதனும் இவரது மனைவி விஜயாவும் தனியாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது பத்திரிக்கை கொடுப்பதாக கூறி வீட்டுக்குள் அடையாளம் தெரியாத இருவர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து பின்னால் மேலும் 3 பேர் வீட்டுக்குள் நுழைந்தனர்.
இதையடுத்து 5 பேரும் ராமநாதனை தாக்கி நகை, பணத்தை கேட்டனர். மேலும் விஜயாவை ஒரு அறையில் தள்ளி பூட்டி விட்டனர்.
இதனால் அச்சம் அடைந்த ராமநாதன் நகைகளையும் பணத்தையும் எடுத்து வந்து மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். இருப்பினும், மர்ம நபர்கள் கூர்மையான இரும்பு கம்பி மூலம் ராமநாதனின் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த ராமநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அறையிலிருந்து வெளியே வந்த விஜயா தனது கணவர் இறந்து கிடப்பதைப் பார்த்து சப்தம் போட்டு அழுதார். இதை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.