சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளையும் நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் சமூக தனித்திருத்தலை கடைபிடிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து நீதித்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீதிமன்ற பணிகளை நிறுத்தி வைப்பது என உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளதாக தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறு உத்தரவு வரும் வரை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் யாருக்கும் அனுமதியில்லை. முக்கியத்துவம் வாய்ந்த, அவசர வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் மட்டும் சம்பந்தப்பட்ட நீதிபதி அனுமதி பெற்று தாக்கல் செய்ய வேண்டும். அந்த வழக்கு விசாரணை நடைபெறும் இடம், நேரம் மற்றும் நேரடியான விசாரணையா காணொலிக் காட்சி மூலமாக விசாரிக்கப்படுமா என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.
மேலும் உயர்நீதிமன்ற நிர்வாகம் அல்லது நீதிமன்ற அலுவல் தொடர்பாக சென்னை மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அனுமதியோடு, மிக அவசர வழக்குகளை மட்டும் கீழமை நீதிமன்றங்கள் வழக்கை விசாரிக்க வேண்டுமென அந்த அறிக்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.