தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் காய்ச்சல் காரணமாகப் புதிதாக 14 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளி நாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறை மூலம் 28 நாள்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 844 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்காணிப்பதற்காக சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மூலம் பின்பற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள வைரஸ் காய்ச்சலுக்கான சிறப்புப் பிரிவில் புதன்கிழமை மட்டும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே, தொடர் காய்ச்சலால் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாகச் சேர்ந்தவர்களையும் சேர்த்து தற்போது 26 பேர் உள்ளனர்.
இவர்களில் 12 பேருக்கு சளி மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் விரைவில் கிடைத்துவிடும் என்றும், ஏற்கெனவே, கரோனா அறிகுறி இல்லை என உறுதி செய்யப்பட்ட பலர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.