கரோனா பயம்: ஊர் எல்லையில் முட்களால் தடை ஏற்படுத்திய கிராம மக்கள்
திருப்பதி: திருப்பதி அருகே காளஹஸ்தி மண்டலத்தை சேர்ந்த வெங்கடாபுரம் கிராம மக்கள் தங்கள் ஊருக்குள் மற்றவர்கள் வருவதை தடுக்க கிராம எல்லையில் முட்களால் தடை ஏற்படுத்தி உள்ளனர்.
ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி மண்டலத்தை சேர்ந்த வெங்கடாபுரம் கிராம மக்கள் கரோனா பரவுவதை தடுக்க தங்கள் கிராமத்திலிருந்து யாரும் வெளியில் செல்லாமலும், வெளியிலிருந்து கிராமத்திற்குள் நுழையாதவாரும் எல்லைகளில் முள்மரங்களை வெட்டி சாலையில் போட்டு தடை ஏற்படுத்தியுள்ளனர். தங்களின் கிராமத்தை சேர்ந்தவர்கள் பட்டணங்களிலும் இருந்தாலும், அவர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதற்கு பின் கிராம எல்லையிலிருந்து கிருமிநாசினி மருந்துகளை தெளித்து கிராமங்களில் உள்ள வீடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கிராம எல்லைகளில் மக்கள் நின்று கொண்டு நுழைய முயலும் மக்களுக்கு கரோனா பாதிப்பு குறித்து எடுத்துரைத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். செய்தி சேகரிக்க முயலும் செய்தியாளர்களையும் விடாமல் திருப்பி அனுப்பினர்.
கரோனா பரவாமல் தடுக்க கிராம மக்கள் ஒற்றுமையுடன் செயல்படுவது சுகாதாரத்துறையினரிடம் பாராட்டை பெற்று தந்துள்ளது.