புதுதில்லி: தலைநகதர் தில்லியில் கரோனா பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு தில்லி மஜ்பூரில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் சமுதாய மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மருத்துவரின் மனைவி மற்றும் மகளுக்கு கரோனோ தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, மார்ச் 12 முதல் 18 வரை கரோனா பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த சுமார் 800 பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனிமைப்படுத்தலுக்கான காலத்தின் போது கரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் தெரிவித்தார்.
மருத்துவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததால் தொற்று ஏற்பட்டதா அல்லது சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பு கொண்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தில்லியில் இதுவரை 34 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.