சென்னை: கரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில், மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரோனா வைரஸ் தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வைரஸ் தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், வைரஸ் தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்து வருவதால், மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிக்கவும், சமூக பரவலை தடுக்கும் விதமாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, மார்ச் 26ஆம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10 ஆம் தேதி வரை கரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால், புதிய திட்டத்தை செயல்படுத்தவும், மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், மாவட்ட அளவிலான தேர்வை நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.