தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஊரடங்கு உத்தரவையொட்டி வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் உணவின்றி தவித்து வரும் தெரு நாய்களுக்குத் தன்னார்வலர்கள் திங்கள்கிழமை மாலை உணவளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. குறிப்பாக நகர்களில் வசிக்கும் மக்கள் வெளியே வராததால் தெரு நாய்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இதேபோல, உணவகங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதால், அவற்றிலிருந்து தூக்கி எறியப்படும் எஞ்சிய உணவுகளும் தெரு நாய்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இதனால், பெரும்பாலான தெரு நாய்கள் உணவின்றி தவிக்கின்றன. எனவே, தஞ்சாவூரில் அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை தலைவர் ஆர். சதீஷ்குமார் தலைமையில் தன்னார்வலர்கள் இணைந்து திங்கள்கிழமை மாலை வீட்டிலேயே தெரு நாய்களுக்காக சிக்கன் பிரியாணி தயாரித்தனர்.
பின்னர், நாஞ்சிக்கோட்டை சாலை, வல்லம் சாலை, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று தெரு நாய்களுக்கு இலை மற்றும் காகிதத் தட்டில் உணவு பரிமாறினர். ஏக்கத்துடன் இருந்த நாய்களும் ஓடி வந்து உணவருந்தின.
இதுகுறித்து சதீஷ்குமார் கூறுகையில், நாங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் உணவுடன் சென்றபோதே, எங்களை உணவுக்காக நாய்கள் பின்தொடர்ந்து வந்தன. புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் சுமார் 40 நாய்கள் சாப்பிட்டன. அந்த அளவுக்கு உணவு இல்லாமல் நாய்கள் தவிக்கின்றன. மொத்தம் 94 தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டது. வருகிற நாட்களிலும் இதற்கான முயற்சியை மேற்கொள்வோம் என்றார் அவர்.
இதேபோல, தீயணைப்புத் துறை சார்பில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கினர். மேலும், சாலையோர ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.