சென்னை: நியாயவிலைக் கடைகளில் திங்கள்கிழமை (மே 4) முதல் இலவச பொருள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இந்தப் பணி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.
டோக்கன்களில் பொருள்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, குடும்ப அட்டைதாரா்கள் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அனைவருக்கும் இலவசம்: அனைத்து வகையான குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, திங்கள்கிழமை முதல் அனைத்துப் பொருள்களும் விலையில்லாமல் அளிக்கப்பட உள்ளன. குறுகலான பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் பரந்த பரப்புள்ள பள்ளிக் கூடங்கள், மைதானங்கள் ஆகியவற்றில் செயல்பட வேண்டுமென உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல்படி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு ஏற்கெனவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.