கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் சமையல் எண்ணை தொழிற்சாலையில் கரோனா தொற்று பாதித்தட தொழிலாளியை வைத்து வேலை நடந்துக் கொண்டிருந்ததால் அந்த தொழிற்சாலைக்கு வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை நள்ளிரவு சீல் வைத்து மூடினர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் சமையல் எண்ணை தொழிற்சாலையில் கொதிகலன் இயக்குபவராக பணிபுரிந்து வரும் சென்னை மாதவரத்தை சேர்ந்த 34 வயது நபர் கரோனா தொற்று அறிகுறிகளோடு பணிபுரிந்து வருகிறார் என்ற தகவல் வருவாய்த் துறையினரின் கவனத்துக்கு சென்றது.
இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் ஏ.என்.குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், டி.எஸ்.பி ரமேஷ் ஆகியோர் மேற்கண்ட தொழிற்சாலையில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அந்த தொழிலாளிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மேற்கண்ட நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிற ஊழியர்களை சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து அவர்களை அவரவர் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால், அவர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாக வருவாய்த் துறையினருக்கு வியாழக்கிழமை இரவு கிடைத்த தகவலின் பேரில் அங்கு வட்டாட்சியர் ஏ.என்.குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பிரபு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ், ஆய்வாளர் சக்திவேல் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் வருவாய்த் துறை உத்தரவை மீறி அங்கு 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வியாழக்கிழமை நள்ளிரவு அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.