தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி 72 வயது மூதாட்டியான அந்தோணியம்மாள் உயிரிழந்தார். 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது மும்பையில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் சென்னையில் இருந்து திரும்பியவர்கள் என 11 பேருக்கு மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மாரியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அருளானந்தம் என்ற 34 வயது லாரி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்யும் ஏற்பாடுகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன.