தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் பணியை புறக்கணித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி செவிலியர்களுக்கு போதிய கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். வேறு பணிகளுக்கு வழங்கப்பட்ட செவிலியர் விடுதியை மீண்டும் செவிலியர்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும். நாள்தோறும் பணி முடித்து வீட்டுக்கு சென்று வர விரும்பும் செவிலியர்களை அழைத்து சென்று வர உரிய போக்குவரத்து வரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், அனைத்துத் துறை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் தங்களது பணியை புறக்கணித்து வளாகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, தருமபுரி கோட்டாட்சியர் தேன்மொழி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் செவிலியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து சமாதானம் அடைந்த செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பினர்.