குமாரபாளையம்: கரோனா பாதிப்பு ஊரடங்கு காலத்திலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் உணவுப் பொருள்களைத் தடையின்றி வழங்கி வரும் விவசாயிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை துண்டு அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
பொதுமக்களின் வாழ்க்கையின் முக்கியத் தேவையான உணவுப் பொருள்களை வழங்கும் விவசாயிகளைக் கௌரவிப்பது என நாட்டில் உள்ள 250-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தற்காலிக காய்கறிச் சந்தையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பெருமாள் தலைமையில் சந்தைக்கு காய்கறிகள், பழங்கள் கொண்டு வந்த விவசாயிகளுக்கு துண்டு அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பி.ராமசாமி, ஒன்றியச் செயலாளர் தனேந்திரன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பெருமாள் கூறுகையில், நாட்டில் நிலவும் சிக்கலான சூழலில் மக்களுக்கு இரவு பகல் பாராமல் உணவு அளிக்கக்கூடிய விவசாய பெருமக்களை இந்நேரத்தில் வாழ்த்துகிறோம். கௌரவிக்கிறோம்.
குமாரபாளையம் வட்டத்தில் குப்பாண்டபாளையம், சமயசங்கிலி ஊராட்சிப் பகுதிகளில் விவசாயத் தோட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்தும் நேந்திரன், கதலி உள்ளிட்ட வாழைகள் அறுவடை செய்யப்படாமல் உள்ளது. பரமத்திவேலூர், போத்தனூர் பாண்டமங்கலம், நஞ்சை இடையாறு பகுதிகளில் வெற்றிலைக் கொடிக்கால் முழுவதும் அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. மோகனூர் பகுதியில் வாழைத்தார் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் காப்பி, மிளகு, வாழைத்தார் போன்றவை அறுவடை செய்யப்படவில்லை.
விவசாய உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த மிகவும் சிரமத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விவசாயிகளின் பிரச்னைகளைக் கேட்டறிந்து உடனடியாக தீர்க்க வேண்டும் என்றார்.