மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 143 மதுக்கடைகளில் விராலிமலை அருகே உள்ள தேங்காய்தின்னிப்பட்டி பகுதியிலுள்ள ஒரு கடையைத் தவிர்த்து 142 மதுக்கடைகளும் சனிக்கிழமை காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டன.
புதுக்கோட்டை நகரிலுள்ள 15 கடைகளிலும் தடுப்புக் கட்டைகள் வெள்ளிக்கிழமை மாலை கட்டப்பட்டன.
சனிக்கிழமை காலை 9 மணிக்கெல்லாம் குடிப்பிரியர்கள் குடைகளுடன் வந்து வரிசையில் நின்றனர்.
டோக்கன்களை பெற்றுக் கொண்டு மதுப்பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
ஆதார் அட்டை எதுவும் கேட்கப்படவில்லை; அளவு வரம்பின்றி தேவையான அளவுக்கு மதுப்பாட்டில்கள் வழங்கப்பட்டன.