சென்னை: வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சனிக்கிழமை அதிகாலை நிகழந்த சாலை விபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, உத்தரப் பிரதேச மாநில முதல்வரை தொடர்புகொண்டு பேசினார். அப்போது, சாலை விபத்தில் வெளிமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்கான ரயில்வே கட்டணம் உள்பட அனைத்து பயணச் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.