வேலூர்: காட்பாடி பகுதியிலுள்ள டாஸ்மாக் எலைட் மதுக்கடையில் இருந்து ரூ.ஒரு லட்சம் மதிப்புடைய மதுபானங்கள், ரூ.25 ஆயிரம் ரொக்கம், சிசிடிவி காமிராவின் ஹாட் டிஸ்க் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் எலைட் மதுக்கடை எனப்படும் உயர் ரக மதுபானங்கள் விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்த கடையில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெற்றன. பின்னர், ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து விருதம்பட்டு காவலர்களுக்கு தகவல் அளித்தனர். காவலர்கள் விரைந்து சென்று ஊழியர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்புடைய மதுபானங்களையும், ரூ.25 ஆயிரம் ரொக்கம், அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ஹாட் டிஸ்க் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மதுபானங்களை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.