சென்னை: சென்னையில் கோடை வெயில் தகிக்கும் சூழலில் திங்கள்கிழமை மழை பெய்து குளிா்வித்தது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த மே 4-ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் நாளுக்கு நாள் அதிகளவு வெப்பம் பதிவாகி வருகிறது. அதேவேளையில் உம்பன் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் சென்னையில் மழை பெய்யாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் சென்னையில் திங்கள்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடுமையான வெப்பம் நிலவிய நிலையில் இரவு 10 மணிக்கு மேல் அம்பத்தூா், நுங்கம்பாக்கம், தியாகராயநகா், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோடை வெயில் தகிக்கும் சூழலில் திங்கள்கிழமை பெய்த மழை மக்களை குளிா்வித்தது.