தஞ்சாவூர்: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த பெண் ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.
தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் தென்காசியை சேர்ந்த 36 வயது பெண் தட்டச்சராக திங்கள்கிழமை (மே 18) பணியில் சேர்ந்தார்.
இவர் பணியில் சேருவதற்காக அண்மையில் தென்காசியில் இருந்து புறப்பட்டார். அப்போது இவருக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில், இவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
மேலும் சார்பு நீதிமன்றத்தில் மொத்தம் 14 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும் கரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.