உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காவது முறையாக பொது ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அதில், ரெப்போ ரேட் என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கரோனா தாக்கத்தால் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. உலகப் பொருளாதம் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும். வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டி குறைவதற்கு வாய்ப்புள்ளது.
வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது. மானாவரி சாகுபடியின் பரப்பளவு 44 சதவீதம் உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.