புதுக்கோட்டை கீழராஜ வீதியிலுள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கிளையில் பணிபுரிந்து வரும் நகை மதிப்பீட்டாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை நகராட்சிப் பணியாளர்களும் சுகாதாரத் துறைப் பணியாளர்களும் வங்கி அலுவலகம், படிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து முழுமையாக கிருமி நீக்கம் செய்தனர்.
தொடர்ந்து வங்கிக் கிளை மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் டாக்டர் யாழினி ஆகியோர் இப்பணியை நேரில் பார்வையிட்டனர்.
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை வளாகத்திலுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபரின் பயண விவரங்களை சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் அர்ஜூன்குமார் நேரில் சந்தித்து விசாரித்து வருகிறார்.
நகை மதிப்பீட்டாளர் குடும்பத்தினரும் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் திசு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.