திருவாரூர்: இந்திய ரயில்வே தனது தடங்கள் அனைத்தையும் மின் மயமாக்கி கொண்டே வருகிறது.
திருச்சி- தஞ்சை- திருவாரூர் மார்க்கத்தில் மின் பாதையாக மாற்றம் செய்து சோதனை ஓட்டமும் முடிவடைந்துவிட்டது. அதேபோல் திருவாரூர்- மயிலாடுதுறை- சிதம்பரம்- கடலூர் துறைமுகம் வரை மின் மயமாக்கி அதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிவடைந்து, ரயில்கள் மின்சார இன்ஜின்களால் இயக்கப்படுகின்றன.
திருவாரூர்-நாகை- காரைக்கால் பகுதிகள் மின் மயமாக்கப்பட்டு அதற்கான சோதனை ஓட்டம் மட்டும் கரோனா நோய்த்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்தது.
இதனிடையே பெங்களூர் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவின்படி மே 23 ஆம் தேதி திருவாரூர்-காரைக்கால் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி திருவாரூரிலிருந்து சனிக்கிழமை காலையில் காரைக்காலுக்கு சோதனை ரயில் இன்ஜின் புறப்பட்டுச் சென்றது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பாதுகாப்பு ஆணையர் அனுமதி கிடைத்தால் காரைக்காலிலிருந்து திருவாரூர்- மயிலாடுதுறை தடத்திலும் திருவாரூர்- தஞ்சை தடத்திலும் மின்சார இன்ஜினில் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.