சென்னை: சென்னை பெருநகரம் தவிர தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் திறக்கவும், கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டிருந்த ஊரடங்கை தமிழக அரசு சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு தளர்வகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 24) 020 முதல் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், * தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
* தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது.
* பணியாளர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக்கூடாது.
* முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.