சென்னை: யாரையோ திருப்திப்படுத்துவதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
அதேநேரத்தில் நீதிபதிகள், பட்டியலின் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் மூன்று மாதங்களுக்கு பின்னர் தற்போது காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர்.
கைதுக்கு பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கோவையில் கரோனா தடுப்புப் பொருள்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது புகார் அளித்தேன். இந்த நிலையில் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது. கரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும் என்று ஆர்.ஆர்.பாரதி கூறினார்.