திருவாரூர்: அரசுப்பணியில் உள்ளவர்களின் வயது வரம்பை 59 -ஆக உயர்த்தியதை திரும்பபெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் திருவாரூரில் கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது.
இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசுப்பணியாளர்களின் வயது வரம்பு 58-இல் இருந்து 59 ஆக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பு வகுப்பு நடத்திய பிறகு தேர்வை நடத்த வேண்டும், வெளிமாநில தொழிலாளர்களை பாதுகாப்புடன் இலவசமாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திட வேண்டும், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் தலைமையிலும் மாவட்ட தலைவர் சு.பாலசுப்ரமணியன் முன்னிலையிலும் கண்ட முழக்க போராட்டம் நடைபெற்றது.