கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் திடீரென்று கரோனா பிரிவு ஏற்படுத்தியதால் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினரை காவலர்கள் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அவசரகதியில் ஏற்படுத்தபட்ட கரோனா சிகிச்சை மையத்தில் பாதிக்கப்பட்ட 3 மற்றும் 7 வயது குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழந்தைகளை அனைத்து வசதிகளும் இருக்கின்ற தேனி அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்க வேண்டும்.
காரணம், சீமாங் சென்டர் தரத்தோடு 24 மணிநேரமும் பிரசவம் பார்க்கும் கம்பம் அரசு மருத்துவமனையில் பிரசவ தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பு, மற்றும் இட வசதி போதிய அளவு இல்லாத கம்பம் அரசு மருத்துவ மனையில் கரோனா சிகிச்சை பிரிவு அமைக்கக்கூடாது என்று கோரி சனிக்கிழமை சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக கம்பம் தெற்கு காவல் நிலைய காவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.