திருப்பூர், பெரியார் காலனியில் சாலையோரம் வீசிச்சென்ற பச்சிளங் குழந்தையை சைல்டு ஹெல்ப் லைன் ஊழியர்கள் சனிக்கிழமை மீட்டனர்.
திருப்பூர், பெரியார் காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் பச்சிளங்குழந்தை கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்துக்கும், சைல்டு ஹெல்ப் லைன் (1098) எண்ணுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த சைல்டு ஹெல்ப் லைன் ஊழியர்கள் அந்தக் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக சைல்டு ஹெல்ப் லைன் ஊழியர்கள் கூறுகையில், பிறந்த ஒரு நாள் மட்டுமே ஆன பெண் குழந்தை என்பதும், தொப்புக்கொடி கூட அறுக்கப்படாமல் வெள்ளைத் துணியில் சுற்றி வீசிச் சென்றுள்ளனர் என்றனர்.