திருச்சி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 773 பேர் திருச்சியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புலம்பெயர்ந்த தொழிலாள்கள் அவரவர் சொந்த மாநிலம் செல்லும் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனையடுத்து திருச்சி, மதுரை, சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் வட மாநிலங்ளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதன்படி, திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 773 பேர் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சியைச் சேர்ந்த 30 பேர், தஞ்சாவூர்- 45, திருவாரூர்- 17, அரியலூர்- 38, கடலூர்- 30, பெரம்பலூர்- 3, புதுக்கோட்டை- 33, ராணிப்பேட்டை- 62, நாகப்பட்டினம்- 33, விழுப்புரம்- 23, திண்டுக்கல் 19, தேனி 24, ராமநதாபுரம் 33, காரைக்கால் 23 ஆகிய 14 மாவட்டங்களில் இருந்து 413 பேர் அரசுப் பேருந்துகள் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.
இதேபோல, மதுரை மாவட்டத்திலிருந்து 360 பேர் அரசுப் பேருந்துகள் மூலம் திருச்சிக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில், பிஸ்கட், உணவு பொருள்களை ஆட்சியர் சு. சிவராசு வழங்கினார்.
பின்னர், சிறப்பு ரயில் மூலம் அனைவரும் இரவு ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல, திருச்சி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் அரசுப் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த 17 பேரும் சென்னையிலிருந்து அவரவர் மாநிலங்களுக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.