திருச்சி: பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நானும் சென்னையில் இருந்து தான் வந்திருக்கிறேன். எனக்கே கூட கரோனா பாதிப்பு இரு்ககலாம். இருப்பினும், யாருக்கும் கரோனா தொர்று பரவாமல் இருக்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம், மாநில அரசு ரூ.5 ஆயிரம் என ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுமுடக்கக் காலத்திலும் ஒப்பந்தத்தில் லஞ்சம், ஊழல் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன. அத்தகைய நபர்கள் முன்னேற முடியாது.
பிரதமர் மோடியால் தமிழக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். ஆட்சியில் இருந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அதிமுக அறிவிப்பது நியாயமில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரியவர்களிடம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், கட்சியின் நிர்வாகிகள் சுப சோமு, ஜவஹர், சுஜாதா, போட்டோ சரவணன், ரெக்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.