தீபாவளி பண்டிகைக்கு காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்கலாம் என தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
பவானியை அடுத்த சிங்கம்பேட்டையில் விவசாயிகளுக்கு கடனுதவியினை வழங்கிய அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது :
தமிழக அரசு விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவிகளை வழங்கி வருகிறது. பவானி தொகுதியில் வியாழக்கிழமை மட்டும் ரூ.3 கோடியில் பயிர்க்கடன், கன்று வளர்ப்புக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், விவசாய சாகுபடிக்கும், குடிநீருக்கும் தண்ணீர் தேவை தீர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்கலாம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளே பின்பற்றப்படும்.
அரசியலில் நிதானம், பொறுமையுடன் செல்லும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. தமிழக நலனில் அக்கறையுடன் திட்டங்களை நிறைவேற்றி வரும் அதிமுகவுக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராக உள்ளனர். மாசில்லா தீபாவளி கொண்டாடுவது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்றார்.