ஓமலூர் அருகே தாரமங்கலத்தில் 20பேர் கொண்ட மர்ம கும்பல் மருந்து கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் பேரூராட்சி பகுதியில் குமார் என்பவர் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் பரணி என்ற மருந்து கடையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் மருந்து வாங்க வந்துள்ளார். பின்பு அவர் மருந்து கடையில் ஏன் இந்த மருந்து இவ்வளவு விலை என கேட்டுள்ளார். அதற்கு மருந்து கடை சார்பில் தற்பொழுது மருந்து விலை ஏற்றத்தால் இவ்வளவு விலை என கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து கடைக்கு வந்த மர்ம நபர் வாய்த் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற நிலையில் 20பேர் கொண்ட கும்பலுடன் வந்து கடையை அடித்து நொறுக்கியுள்ளார்.
இதில் அவர் தாரமங்கலம் அருகேயுள்ள கோணகாபாடி ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரபு தலைமையில் 20பேர் கொண்ட கும்பல் நொறுக்கியதாக சிசிடிவி கேமராவில் பதிவான காணொளி வைத்து கண்டறியப்பட்டது.
மேலும் கடையை நொறுக்கியது மட்டுமல்லாமல் உரிமையாளர் குமாரை தாக்கியதால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து தாரமங்கலம் காவல்துறையினர் மருந்து கடை நொறுக்கிய சம்பவம் குறித்து சிசிடிவியில் பதிவான காணொளியை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் 20 பேர் கொண்ட கும்பல் மருந்து கடையை நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.