திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகரில் வசித்து வந்த திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் அக்கினி ராஜ் (87) உடநலக் குறைவால் சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் காலமானார்.
பட்டதாரியான இவர், கடந்த 1964 ஆம் ஆண்டு ஆட்சிமொழி பிரிவு சட்ட நகலை எரித்த மொழிப்போர் தியாகி. இவர் திமுகவின் மீது கொண்ட பற்றால் தனது அரசு பணியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து பணியாற்றினார்.
1967-இல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதே காலகட்டத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார். திருப்பரங்குன்றம் யூனியன் சேர்மன் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் 1998 -இல் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், முத்தரசு, செந்தில், கருணாநிதி, சரவணன் ஆகிய நான்கு மகன்களும் உள்ளனர்.
இவருடைய நல்லடக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அவருடைய சொந்த கிராமமான கூத்தியார்குண்டுவில் நடைபெற உள்ளது.