அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியருகே உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க பயணிகள் சார்பில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டையிலுள்ள புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில், அதனையடுத்துள்ள பயணிகள் நிழற்குடை பகுதி மற்றும் பேருந்துகளை நிறுத்துவதற்கான மேடை ஆகிய அனைத்துப்பகுதிகளும் போதிய மின்விளக்குகள் இன்றி இருளடைந்து காணப்படுகிறது. இதனால் பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணிகளிடம் பணம் உள்ளிட்ட அதிக மதிப்புள்ள பொருள்கள் திருடுபோவதும், சமூக விரோதிகள் நடமாட்டத்தால் பெண் பயணிகளுக்கு அச்சுறுத்தலும் இருந்து வருகிறது.
இந்நிலையில், பயணிகள் பாதுகாப்புக் கருதி போதிய கூடுதல் மின்விளக்குகளும் அமைக்கப்படவில்லை. இதனிடையே நுழைவாயில் பகுதியருகே உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கடந்த சில ஆண்டுகளாகப் பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போதுவரை நடவடிக்கை இல்லையெனக் கூறபப்படுகிறது.
எனவே பயணிகள் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியருகே விரைவில் உயர்கோபுர மின்விளக்குகளை அமைக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.