சத்தியமங்கலம் பகுதியில் புதன்கிழமை பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை வானில் கருமேகங்கள் சூழ்ந்தபடி லேசாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக மாறியது.
மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.
இந்த மழை விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும் என சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலை அறுவடை நடந்து வரும் நிலையில் தற்போது மழை பொழிவால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு அறுவடைக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.