ஸ்ரீவில்லிபுத்தூர்: மானாமதுரையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வழக்குரைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சுந்தரநடப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சட்ட கல்லூரியில் படித்தபோது 21 வயது நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் 2006 ஜனவரி 3 அன்று கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு சென்ற இளையராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி ஜனவரி 4ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக மானாமதுரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இளையராஜா தற்போது வழக்குரைஞராக இருப்பதால் சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து வேறு பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் விசாரணையை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணையில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கிய வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுமதி சாய்பிரியா வழக்குறைஞர் இளையராஜாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.