மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 28 பேர் பலியானதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புணே மண்டல ஆணையர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மேற்கு மகாராஷ்டிர மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 2,300 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பெரிய அளவிலான பயிர் நிலங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் 21 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர், இதில் சோலாப்பூரில் 14 பேரும், சாங்லியில் 9 பேரும், புனேவில் 4 பேரும், சதாராவில் ஒருவரும் பலியாகியுள்ளனர். மேலும், புனேவில் ஒருவரை இன்னும் காணவில்லை என தெரிவித்தார்.
புனே, சோலாப்பூர், சதாரா மற்றும் சாங்லி ஆகிய மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு, சோயாபீன், காய்கறிகள், அரிசி, மாதுளை மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இப்பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சுமார் 513 கால்நடைகள் உயிரிழந்துள்ளது.
சோலாப்பூர் (17,000 பேர்), சாங்லி (1,079 பேர்), புணே (3,000 பேர்) மற்றும் சதாரா (213 பேர்) மாவட்டங்களில் உள்ள 6,061 வீடுகளைச் சேர்ந்த 21,292 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.