இந்தியா முழுவதும் கரோனா பொதுமுடக்க காலத்தில் 25 லட்சம் வழக்குகள் இணையதளம் மூலம் விசாரிக்கப்பட்டதாக மத்திய சட்டதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் நீதி அமைச்சர்களின் இணைய மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில், கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைச்சர்களும், பாகிஸ்தானின் சட்ட மற்றும் நீதி அமைச்சகத்தின் பிரதிநிதியும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பேசுகையில்,
இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இணைய-சட்ட சேவைகள் மூலம் 44 லட்சம் ஏழை மக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்க காலத்தில், நாடு முழுவடும் 25 லட்சம் வழக்குகள் இணையதளம் மூலம் நடத்தப்பட்டது, அதில் 9 ஆயிரம் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடத்தப்பட்டது என கூறினார்.