மகாராஷ்டிரத்தில் கரோனா பேரிடர் காலத்திலும், 15 கி.மீ. சைக்கிளில் சென்று கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்த 87 வயது மருத்துவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சந்திரபூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ராம்சந்திர தனேகர் தனது சைக்கிளில் தினமும் 10-15 கிலோமீட்டர் பயணம் செய்து சுகாதார வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள ஏழைகளின் வீடு வீடாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
இதுகுறித்து மருத்துவர் ராம்சந்திர தனேகர் கூறுகையில்,
"கடந்த 60 ஆண்டுகளாக, நான் கிட்டத்தட்ட தினமும் கிராமவாசிகளைப் பார்வையிட்டு வருகிறேன். கரோனா பயம் காரணமாக, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் பயப்படுகிறார்கள், ஆனால் எனக்கு அத்தகைய பயம் இல்லை. இப்போதெல்லாம், இளம் மருத்துவர்கள் பணத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறார்கள், அவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்ய விரும்பவில்லை.
எனது கைகால்கள் வேலை செய்யும் வரை நான் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன்" என்று உற்சாகமாக கூறினார்.
கிராமவாசி ஒருவர் கூறுகையில், "அவர் எங்களுக்கு ஒரு கடவுளைப் போன்றவர், எந்த நேரத்திலும் ஒரே அழைப்பில் எங்களை அணுகும் ஒரே மருத்துவர் அவர் தான். மற்றவர்கள் சிகிச்சை அளிக்க மறுக்கும் தொற்றுநோய் காலங்களிலும் கூட அவர் தொடர்ந்து எங்களுக்கு சேவை செய்து வருகிறார்" என கூறினார்.