திரையரங்குகள் திறந்தாலும் அடுத்த 60 நாள்களுக்கு 7 சதவீத மக்கள் மட்டுமே செல்வார்கள் என லோக்கல் சர்க்கிள்ஸ் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
கரோனா தொற்றினால் போடப்பட்ட பொதுமுடக்கத்திற்கு பிறகு தில்லி, ஹரியாணா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள தியேட்டர்கள் செயல்படத் தொடங்கி உள்ளது.
இருப்பினும், மகாராஷ்டிரம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம், சத்தீஸ்கர் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, அடுத்த 2 மாதங்களுக்கு திரையரங்குகள் திறக்கப்பட்டால் வருவார்களா?, மாட்டார்களா? என கணக்கெடுப்பு ஒன்று எடுக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் 8,274 பேர் வாக்களித்தார்கள்.
இந்த வாக்கெடுப்பின் முடிவின்படி, 4 சதவிகிதத்தினர் மட்டுமே புதிய வெளியீடுகள் வந்தால் தாங்கள் பார்க்கப் போவதாகவும், 3 சதவீதம் பேர் புதிய அல்லது பழைய திரைப்படத்தைப் பொருட்படுத்தாமல் போவதாகவும் கூறியுள்ளனர்.
74 சதவீதம் பேர் தாங்கள் செல்லமாட்டோம் என்றும் 2 சதவீதம் பேர் உறுதியாக தெரியவில்லை என்றும் 17 சதவீதம் பேர் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் போது மக்கள் எப்படி திரைப்படங்களைப் பார்க்க வெளியே செல்லத் திட்டமிடுகிறார்கள் என்பதை அறிய லோக்கல் சர்க்கிள்ஸ் கடந்த சில மாதங்களில் இதேபோன்ற கணக்கெடுப்புகளை நடத்தியது. ஜூலை கணக்கெடுப்பில், 72 சதவீத பேர் கரோனா தொற்றின் பரவலை மனதில் வைத்து திறந்தால் செல்லமாட்டோம் என்று கூறியிருந்தனர்.
இந்த எண்ணிக்கை ஆகஸ்டில் 77 சதவீதமாக அதிகரித்து அக்டோபரில் 74 சதவீதமாக உள்ளது.
சினிமா அரங்குகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறுகின்றன, அதாவது அவற்றின் வளாகங்கள் மற்றும் பிற கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள், சமூக இடைவெளி, வெப்ப திரையிடல், ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
இருப்பினும், அடுத்த 60 நாட்களில் மக்கள் தியேட்டர் செல்வதில் தொடர்ந்து தயக்கம் காட்டுவது கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.