புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் நீதி மய்ய மாநில தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் (70) கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிழந்தார்.
மருத்துவரான எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் 1985-90 ல் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2001-2006 மற்றும் 2006-2011 பேரவைத் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2012-2014 வரை திமுக அமைப்பாளர் இருந்த இவர் 2018 ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதி மய்யத்தின் மாநில அமைப்பாளராக இருந்து வந்தவர், சில மாதங்களுக்கு முன்பு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.