தில்லி ஷஹ்தாராவின் ஜிடிபி என்க்ளேவ் பகுதியில் திருநங்கை ஒருவர் சனிக்கிழமை நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரகண்ட் பகுதியைச் சேர்ந்த ஏக்தா ஜோஷி (வயது 42). இவர் தில்லியில் உள்ள ஜிடிபி என்க்ளேவ் பகுதியில் மற்றொரு திருநங்கை அனிதாவுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
மேலும், இவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தி வருகிறார். அவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். அப்பகுதியில் தனது குழு உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கி வந்தார்.
இவர் சமூக சேவைகளும் செய்து வந்துள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள சமூகத்திற்கு தலைவியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு அவரது வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காயமடைந்த ஜோஷியை உடனடியாக மீட்டு மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை. ஜோஷியின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், தனிப்பட்ட பகையால் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறினர். மேலும், தினிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக கூறினார்.