அரியர் தேர்ச்சி அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு, யுஜிசி, ஏஐசிடிஇ பதிலளிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு, யுஜிசி, ஏஐசிடிஇ பதிலளிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், இந்த மனு கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவற்றை காப்பதற்காக தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு அனைத்து பாடங்களையும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை சோர்வடைய செய்யும். மேலும் இது மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையில் உள்ளது.

25 சதவீத மதிப்பெண்ணுக்கு குறைவாகப் பெற்று தேர்வில் தோல்வி அடைந்தவர்களையும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் குறையும். தேர்வில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு நம்பிக்கையும், மன திருப்தியும் கிடைக்கும்.

சர்வதேச மாணவர்களுடன் போட்டியிடும் திறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை தேர்வு மூலம்தான் வெளிப்படும். சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்தது தவறானது.

அரசின் இந்த முடிவை கைவிடக் கோரி  மனு அளித்தும் பலன் இல்லை. எனவே அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். 

வழக்குரைஞர் ராம்குமார் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தரப்பில் இதே கோரிக்கையுடன் வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், அதனையும் இந்த வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இரண்டு வழக்குகளையும் விசாரித்தனர். அப்போது மனுதாரர் பாலகுருசாமி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய் ஆனந்த் , அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) மட்டுமே அதிகாரம் உள்ளது.

தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு யுஜிசி உத்தரவுக்கு முரணாக  முடிவு எடுத்து உள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு ஏ.ஐ.சி.டி.இ தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாக வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் விஜய்நாராயண், பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் தான் அரியர் மாணவர்கள் தேர்ச்சி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இறுதிப் பருவத் தேர்வு எழுதும் மாணவர்களைத்தான் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற செய்யகூடாது.

எனவே பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில்தான் மாணவர்களை தேர்ச்சி பெற செய்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து  தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனுக்கள் குறித்து தமிழக அரசு, பல்கலைகழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com