நாடாளுமன்ற கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வருகையை கைப்பேசி செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் அச்சுறுத்தலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய தேசிய தகவல் மையம் ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.
இந்த செயலியை பயன்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்களது முகத்தை புகைப்படம் எடுத்து அந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும், இந்த செயலியில் வருகை பதிவேடு, விடுப்பு விண்ணப்பங்கள், மின் அறிக்கைகள், அரை மற்றும் முழு நாள் வருகைப் பதிவு போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த செயலி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலக ஊழியர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும் என கூறினார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.