ராஜபாளையம்: ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் நிறுத்தி இருந்த வெளி மாநில லாரி திடீரென செவ்வாய்க்கிழமை மாலை தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் லாரியின் பகுதி மட்டும் சேதமானது. கேரள மாநிலத்திலிருந்து ராஜபாளையத்திற்கு நுால் லோடு ஏற்றுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை லாரி மதுரை சாலையில் உள்ள லாரி செட் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது.
லோடு ஏற்றுவதற்கு தயாராகாத நிலையில் கேரளாவை சேர்ந்த ஓட்டுநர்கள் ஜின்சன், மனோஜ் இருவரும் லாரியை மதுரை சாலையில் நிறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் மாலை லாரியின் முன் பகுதியில் திடீரென பற்றிய தீ மற்ற பகுதிக்கும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இச்சம்பவத்தில் லாரியின் முன் பகுதி முழுவதும் கருகியது. வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.