தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக 224 செயலிகளுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே வெளியிட்ட அறிக்கையில்,
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் 69 ஏ பிரிவின் கீழ் டிக்டோக், ஹலோ உள்ளிட்ட 224 செயலிகளின் பயன்பாடுகளை இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தேசிய பாதுகாப்பு விஷயங்கள் மேம்படும், மேலும் எந்தவொரு இந்தியரின் தகவல்களும் வெளிநாட்டினருக்கு கிடைக்காமல் தடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
கடந்த ஜூன் மாதத்தில், டிக்டோக், யூசி உலாவி, ஷேரீட், வெச்சாட், கேம்ஸ்கேனர் மற்றும் மி கம்யூனிட்டி உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது.
இந்த மாத தொடக்கத்தில், பிரபல இணைய விளையாட்டான பப்ஜி உள்பட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.