அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடியில் கார் ஓட்டுநரால் கடத்தப்பட்டகாரானது, அருப்புக்கோட்டை நகர் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகனின் துரித நடவடிக்கையால், செவ்வாய்க்கிழமை இரவு கல்லூரணி கிராமத்தில் பிடிபட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் நல்லேந்திரன். இவர் அப்பகுதியில் சொந்தமாக மீன்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் புதிதாக வாங்கிய தனது காரில் செவ்வாய்க்கிழமை நல்லேந்திரன் தனது கார் ஓட்டுநரான ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப் பட்டியைச் சேர்ந்த நந்தகுமாருடன் காரைக்குடி சென்றுவிட்டு அன்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நரிக்குடியில் காரை நிறுத்திய நல்லேந்திரன் தனது கார் ஓட்டுநரிடம் காரை ஒப்படைத்து முதுகுளத்தூரிலுள்ள தனது வீட்டுக்குச் சென்று காரை ஒப்படைக்குமாறு கூறினார். பின்னர் அங்கிருந்து நல்லேந்திரன் வேறு ஒருநபருடன் மற்றொரு காரில் வேறுஒரு வேலை தொடர்பாகச் சென்று விட்டார்.
இந்நிலையில் தனது வீட்டிற்குத் தொடர்பு கொண்ட நல்லேந்திரன் ஒருமணி நேரமாகியும் தனது கார் வீட்டிற்கு வராததாலும், கார் ஓட்டுநர் போனை எடுத்துப் பேசாததாலும் காரை நந்தகுமார் கடத்திச்சென்றாரா அல்லது வேறு யாரேனும் மர்ம நபர்கள் காரைக் கடத்திவிட்டனரா என சந்தேகத்தின் பேரில் நரிக்குடி காவல்துறையிடம் போன்மூலம் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிபடையில் காவல்துறையினர் கார் ஓட்டுநரின் போன் நம்பரைச் சேஸ் செய்து அருப்புக்கோட்டையை நோக்கிச் செல்வதாக அருப்புக்கோட்டை நகர் காவல்துறையிடம் கூறியுள்ளனர். உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்ட நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அக்காரை கல்லூரணி அருகே தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஆனால் நிற்காத கார், அவரை மோதிக் கொல்ல வந்துள்ளது. அதை சுதாரித்த காவல்ஆய்வாளர் பாலமுருகன் தப்பித்தார். திரைப்பட பாணியில் நிற்காமல் தப்பிச் சென்ற காரை தனது வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார். உடனடியாகக் காரை அங்கேயே விட்டுவிட்டு காரின் ஓட்டுநர் காட்டுக்குள் தப்பி ஓடி மறைந்துவிட்டார்.
இதனிடையே காரால் மோதித் தன்னைக் கொல்ல வந்தபோதும், அசராமல் துரிதமாகச் செயல்பட்டு கடத்தப்பட்ட காரை ஒரு மணிநேரத்தில் மடக்கிப் பிடித்த அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகனுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிலையில் காரைக்கடத்தியது ஓட்டுநர்தானா அல்லது வேறுயாரேனுமா என நரிக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் தப்பியோடிய காரின் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.