கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 5 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து மாநிலங்கவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில்,
கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், விபத்து குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் தங்களது அறிக்கையை 5 மாதத்திற்குள் சமர்பிப்பார்கள் என தெரிவித்தார்.
துபையிலிருந்து கோழிக்கோடுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி 190 பேருடன் வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும்போது ஓடுதளத்தைக் கடந்து பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் மற்றும் 16 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
காயமடைந்த 149 பயணிகள் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பயணிகள் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.