திருப்பதி: திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி துர்காபிரசாத் மாரடைப்பால் புதன்கிழமை மரணமடைந்தார்.
திருப்பதியின் நாடாளுமன்ற உறுப்பினர் துர்காபிரசாத் (வயது 64) கடந்த 15 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு புதன்கிழமை திடீரென்று மராடைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நாயுடுபேட்டை மண்டலம் பீமவரத்தை சேர்ந்த அவர், 1985ம் ஆண்டு அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த துர்காபிரசாத், 1996ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆந்திர அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
2009ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மிக குறுகிய காலத்தில் அரசியல் வாழ்க்கையில் உயர்ந்தார். மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அவர் 28 வயதில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து 4 முறை தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ வாகவும், திருப்பதி தொகுதியில் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றார்.
இவரின் மரணச் செய்தியை கேட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி மற்றும் பல ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அவரின் மறைவு கட்சிக்கு பெரும் இழப்பு என்று அவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.