தில்லியில் இரவுநேர ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 220 பேர் மீது நேற்று ஒரே நாளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நாட்டின் தலைநகரான தில்லியிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6 முதல் 30 வரை தில்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல்நாளான நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறியதாக 220 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், முகக்கவசம் அணியாத 842 பேரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.