மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டோம்ஜூரில் வேட்பாளர் ராஜிவ் பானர்ஜியை ஆதரித்து நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்.
இந்த பேரணியின் போது பேசிய அமித் ஷா கூறியதாவது,
நான் ஒரு கிராம பஞ்சாயத்தை மட்டுமே பார்வையிட்டேன், ஆனால் அங்கு மக்களிடம் பார்த்த உற்சாகம், ராஜீப் பானர்ஜி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன். மே 2 ஆம் தேதி, 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பாஜக ஆட்சி அமைக்கும். மம்தா பானர்ஜியின் விரக்தியை அவரது பேச்சுகளிலும் நடத்தையிலும் காணலாம் எனத் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று மட்டும் பாஜக சார்பில் மேற்குவங்கத்தில் சிங்கூர், டோம்ஜூர், ஹவுரா மத்தியா உள்ளிட்ட இடங்களில் மூன்று பேரணிகள் நடைபெறுகின்றன.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.