சரக்கு ரயில்கள் மூலம் 2020-21 நிதியாண்டில் ரூ. 1.17 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனாவால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதியில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் பொருள் ஏற்றுமதியில் சிறிது சரிவு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2019-20 நிதியாண்டைவிட கடந்தாண்டு அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
சரக்கு ரயில்களில் 2020-21 நிதியாண்டில் 12,326 லட்சம் டன்கள் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 1,17,386 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் ரூ. 1,13,897 கோடி வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரயில்களின் வேகத்தை 24 கி.மீ வேகத்தில் இருந்து 44 கி.மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2020 முதல் 450 வேளாண் ரயில்கள் இயக்கப்பட்டன. அதில், 1.45 லட்சம் விவசாய விளைபொருள்கள் அனுப்பப்பட்டுள்ளது.