ஹரியாணா மாநில பாடத்தில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன.
இந்நிலையில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்தும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.
இதையடுத்து, ஹரியாணா கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில்,
சிபிஎஸ்இ அறிவித்ததையடுத்து, ஹரியாணா மாநிலத்திலும் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், 10ஆம் வகுப்பிற்கான மதிப்பெண் வகுப்பறை செயல்பாட்டை வைத்து வழங்கப்படும். எனத் தெரிவித்துள்ளார்.